சேலம் மத்திய சிறையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதி, ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (55). சொத்து தகராறு காரணமாக பென்னாகரம், நல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாள் என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட சிவராஜ், கடந்த 15 நாள்களாக சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறையின் 9-வது பிரிவில் இருந்து திடீரென சமையல் அறைக்குள் நுழைந்த சிவராஜ், அங்கிருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை, சக கைதிகள் மீட்டு சிறை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு சிவராஜூக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிவராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டு 2 வாரங்களாகியும் தன்னை உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என்ற வேதனையில் சிவராஜ் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், கூடுதல் கண்காணிப்பாளர் நிகிதா ஆகியோர் சிறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் சிறையில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.