முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரி சார்பு நீதிபதி மாரடைப்பால் சேலத்தில் மரணம்

தருமபுரி மாவட்ட சார்பு நீதிபதி வி.நாராயணசாமி (49), மாரடைப்பால் சேலத்தில் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

Updated On : 15 ஜூலை, 2013 at 11:49 PM
பகிர்:

தருமபுரி மாவட்ட சார்பு நீதிபதி வி.நாராயணசாமி (49), மாரடைப்பால் சேலத்தில் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

 இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:

தருமபுரி மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் நாராயணசாமி. பவானியைச் சேர்ந்த இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் இருந்து தருமபுரிக்கு இடமாறுதல் செய்யப்பட்ட நாராயணசாமி, வாரம்தோறும் விடுமுறைக்காக திருப்பூர் சென்றுவிட்டு திங்கள்கிழமைகளில் பேருந்து மூலம் தருமபுரிக்கு திரும்புவது வழக்கம்.

Advertisement

 அதன்படி, திங்கள்கிழமை பணிக்குச் செல்வதற்காக திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சேலம் அருகே வந்தபோது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், தனது செல்பேசி மூலம் 108 ஆம்புலன்ஸþக்கு தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையே பேருந்து, சேலம் புதிய பேருந்து நிலையம் வந்ததும், கீழே இறங்கிய நாராயணசாமி அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தியுள்ளார்.

 சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன பணியாளர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இருந்ததாகக் கூறப்படுகிறது.

 சார்பு நீதிபதி இறந்த தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் கே.சி.மஹாலி, துணை ஆணையர் ஏ.ஜி.பாபு உள்ளிட்ட காவல்துறையினரும், சேலம் மோட்டார் வாகன வழக்குகள் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராமகிருஷ்ணன், சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட வழக்குரைஞர்கள் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நீதிபதி நாராயணசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 உயிரிழந்த நீதிபதிக்கு விமலா என்ற மனைவியும், தில்லியில் பணியாற்றும் ஒரு மகன், மகளும் உள்ளனர்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.