பர்கூர் அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை
பர்கூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் அரிசி மூட்டைகளை திருடிச்சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தண்ணீர் பள்ளம்
பர்கூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் அரிசி மூட்டைகளை திருடிச்சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தண்ணீர் பள்ளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (40). இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், சின்னமல்லப்பாடியில் இவருக்கு சொந்தமான தங்கும் விடுதியும் உள்ளது. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஞானசேகரன் தனது குடும்பத்துடன், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தமலேரிமுத்தூர் கிராமத்தில் உள்ள உறவினரின் மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள சென்றனர்.
பின்னர், செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து, ஞானசேகரன் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த பொருள்கள் கீழே சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், மளிக்கடைக்காக வாங்கி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தலா 25 கிலோ எடையுள்ள 20 அரிசி மூட்டைகளும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பர்கூர் காவல் நிலையத்தில் ஞானசேகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.