பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று சேலம் வந்தனர்.
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் வி.ரமேஷ், சேலம் மரவனேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த நிலையில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி ஐ.ஜி. மஞ்சுநாதா, எஸ்.பி. அன்பு ஆகியோர் சேலத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சி.மஹாலியுடன் அவர்கள் பல மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உடனிருந்தார். இதையடுத்து விசாரணை தொடர்பான ஆவணங்கள் மாநகர காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் சிபிசிஐடி சேலம் ஆய்வாளர் என்.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கொலை நடைபெற்ற இடத்தில் ஆய்வு நடத்தினர்.ஆடிட்டர் ரமேஷின் அலுவலகம், சம்பவம் நடைபெற்ற தெரு, மரவனேரி பிரதான சாலை, அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் ரமேஷின் வீடு ஆகிய இடங்களை விடியோ மூலமும் புகைப்படம் மூலமும் பதிவு செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.