கிருஷ்ணகிரி அருகே மாணவி கழுத்து நெரித்துக்கொலை
கிருஷ்ணகிரி அருகே மாணவி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே மாணவி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவரது மகள் பவித்ரா (17). இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள இவர் தேர்வில் 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லையாம். இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் பவித்ராவை தேடி வந்தனராம்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த வேப்பாலப்பட்டி கிராமத்தில் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தபகுதி மக்கள் கிருஷ்ணகிரி வட்டார காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார்,
டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன், காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில், சடலமாக கிடந்தது மாணவி பவித்ரா என்பது தெரியவந்தது. இதுபற்றி பவித்ராவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து போலீஸ் மோப்பநாய் ரோபோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் ஓடிய நாய் பின்னர் உடல் கிடந்த இடத்திற்கே வந்து நின்று விட்டது.
இதையடுத்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த பவித்ராவின் உடலில் பெருவிரல்கள் மற்றும் கழுத்தில் காயங்கள் உள்ளது. இதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் மாணவியை கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.