முகப்பு
தற்போதைய செய்திகள்

நிதிஷ் வெளியேறியதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை: வெங்கய்ய நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டது கட்சியின் உள் விவகாரம்.

Updated On : 17 ஜூன், 2013 at 6:51 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:44 PM

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டது கட்சியின் உள் விவகாரம். ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் மற்ற கட்சிகள் தலையிட முடியாது.நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரபலமான தலைவர். அவருக்கு மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அதனால் தான் அவரைக் கண்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

2004-ல் வாஜ்பாய் அரசு பதவியிலிருந்து வெளியேறும்போது, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. ஆனால், 9 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி அரசில் இது 5 சதவீதமாக சரிந்துள்ளது. அதுபோல, வாஜ்பாய் ஆட்சியில் 4 சதவீதமாக இருந்து பணவீக்கம் இப்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 3,63,000 கோடி வட்டி செலுத்த வேண்டிய அளவுக்கு நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

Advertisement

வாஜ்பாய் ஆட்சியில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு  ரூ. 40  முதல் ரூ. 42 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ. 58 ஆக அதிகரித்துள்ளது. ஊழல், மோசமான நிர்வாகம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவது குறைந்துவிட்டது. நமது நாட்டு தொழிலதிபர்களும் வெளிநாட்டில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதி.

தேசிய அரசியலில் 3-வது அணி என்பது சாத்தியமில்லாதது. ஏற்கெனவே உருவான தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போன்ற அணிகள் தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. எப்போது தேர்தல் நடந்தாலும் பாஜக தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும். எனவே, பாஜக தலைமையில் அரசு அமைவது உறுதி.மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை (ஜூன் 17) முதல் ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் 28-ம் தேதி இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் வெங்கய்ய நாயுடு.

பேட்டியின் போது பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.