விருதுநகர் யாத்ரீகர்கள் 9 பேர் பாதுகாப்பாகத் திரும்பினர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலிருந்து கோபால்சாமி, சுசிலா, முனியாண்டி, நாரயணன், பேச்சியம்மாள், வெள்ளையம்மாள், பொன்னியாண்டி உள்ளிட்டோரும், ராஜபாளையத்திலிருந்து சோமு மற்றும் கஸ்தூரி ஆகியோர் இம்மாதம் 5-ம் தேதி சென்னை புரசைவாக்கம் ஜெய
விருதுநகர் மாவட்டத்திலிருந்து புனித யாத்திரை சென்ற 9 பேர் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு திரும்பினர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலிருந்து கோபால்சாமி, சுசிலா, முனியாண்டி, நாரயணன், பேச்சியம்மாள், வெள்ளையம்மாள், பொன்னியாண்டி உள்ளிட்டோரும், ராஜபாளையத்திலிருந்து சோமு மற்றும் கஸ்தூரி ஆகியோர் இம்மாதம் 5-ம் தேதி சென்னை புரசைவாக்கம் ஜெய அனுமான் டிராவல்ஸ் மூலம் வட மாநிலங்களில் உள்ள புனித யாத்திரை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, கேதர்நாத் செல்லும் வழியில் மழையால் வழி தெரியாமல் சிக்கி தவித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நாரயணன்(58) என்பவர் கூறியதாவது: தனியார் டிராவல்ஸ் மூலம் ஹரித்துவார், யாமுனாத்ரி, கங்கையாத்ரி, ஹரித்துவார், பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாச் சென்றோம். அதில், குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.
அப்போது, பத்ரிநாத் பார்த்து விட்டு திரும்பி, 17-ம் தேதி கேதர்நாத் செல்வதற்காக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தோம். அப்போது பலத்த மழை பெய்தது. அதனால், மழை வெள்ளத்தால் சாலைகள் அனைத்தும் அரித்துச் செல்லப்பட்டு இருந்ததால் பாதிவழியிலேயே பாதை தெரியாமல் நிறுத்தினோம். அப்போது, பேருந்துக்குள்ளே உணவு எதுவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்.
அதையடுத்து, ராம்பூர் மற்றும் ருத்திரையா போன்ற மாற்றுப்பாதை வழியாக புதுதில்லி வந்து ரயில் நிலையம் சென்றோம். அங்கு எடுத்திருந்த ரயில் டிக்கெட்டில் பயணம் மேற்கொள்வதற்கான தேதியும் முடிந்திருந்தது. பின்னர், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரயில் நிலையத்தில் நின்றிருந்தோம். அப்போது அங்கிருந்த புதுதில்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு அரசு அதிகாரிகள் சிறப்பாக வரவேற்று உணவு தங்கும் இடம் அளித்தனர். அதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தலைமைச் செயலக அதிகாரிகள் அனைவரும் உபசரித்து சென்னை-செங்கோட்டை விரைவுப் பேருந்தில் ஏற்றி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வழி அனுப்பி வைத்ததாக நாராயணன் தெரிவித்தார்.