மாசிநாயக்கன்பட்டி அருகே இறந்து கிடந்தவர்அடையாளம் தெரிந்தது: மனைவியிடம் விசாரணை
சேலத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் அடியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் லாரி ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது. இ
சேலத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் அடியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் லாரி ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாசிநாயக்கன்பட்டியில் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழே கழுத்தை அறுத்து பகுதியளவு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் கந்தாஸ்ரமம், கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் (45) என்பது தெரிய வந்துள்ளது. இருசக்கர வாகனங்களை பழுது பார்த்து வந்த அவர், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி நவமணி (35), அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
Advertisement
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நவமணிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது. நவமணியின் பள்ளிக்குச் சென்று நாராயணன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நாராயணன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நவமணியிடம் அம்மாப்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே நாராயணனை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரையிலும் அவரது சடலத்தை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் சடலத்தை கொடுத்து அனுப்பி வைத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
.