தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு பழைய முறைபடியே தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறினார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்குப்பின்னர் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு தண்ணீர் குறைந்துவிட்டதாகவும், எனவே, இப்பகுதி விவசாயிகளின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கத்தை, தடப்பள்ளி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி தலைமையிலான விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முறையிட்டனர்.
இதையடுத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதி விவசாயிகளின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பழைய முறைபடியே தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் உறுதி அளித்தார்.
இது குறித்து தினமணி நிருபரிடம், அமைச்சர் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 10 மாதங்கள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் வறட்சி காரணமாக தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
தடப்பள்ளி விவசாயிகளின் கோரிக்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டைக்கு பழையமுறைபடி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் தண்ணீர் திறக்கப்படும். இந்த வாய்க்காலை ரூ.810 கோடியில் சீரமைக்கும் பணிகளுக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது கீழ்பவானி பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் 50 சதவீதம் மிச்சமாகும் என்றார்.
அமைச்சரின் அறிவிப்புக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.