ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி செய்ததாக 3 பேரை ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி செய்ததாக 3 பேரை ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தி அருகே டி.ஜி.புதூரில் டி.வி.எஸ். ஈமு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.25,000 முதலீடு செய்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதாம். இதை நம்பி ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் ரூ.7 கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தார்களாம்.
தொடக்கத்தில் ஊக்கத்தொகை வழங்கி வந்த இந்த நிறுவனம், 2012-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு மேல் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்கவில்லை. இந்நிலையில், இந்நிறுவனம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டது. இதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை 822 பேர் இந்நிறுவனத்தில் ரூ.7 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக புகார் செய்தனர்.
இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது முகவரியை போலியாக பதிவு செய்ததால் இவர்களை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஈரோடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த 3 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்கள், தஞ்சாவூரை சேர்ந்த பாலாஜி (26), கோவை சேர்ந்த ராஜா (28), அரவிந்தன் (27) ஆகியோர் என்பதும், இவர்கள் மூவரும் சேர்ந்து தங்களது பெயர்களை வேறு பெயர்களில் மாற்றி டிவிஎஸ் ஈமு நிறுவனத்தை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஈமு கோழி மோசடியில் கிடைத்த பணத்தில் கோவை அருகே துடியலூரில் பங்களா கட்டி வருவதாகவும் இவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர். துடியலூரில் கட்டப்பட்டு வரும் பங்களா உள்பட இவர்களின் சொத்துக்களை முடக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.