விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபானக்கடையை உடனே மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
இது குறித்து ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 11-வது வார்டு அருந்ததியினர் தெருவைச் சேர்ந்த பொதுமக்களின் சார்பாக ஆட்சியரிடம் நேரில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் 11-வது வார்டில் அருந்ததியினர் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டமாக உள்ள பேருந்து நிலையம், அரசு வங்கிகள், கால்நடை சிகிச்சை மையம் மற்றும் பள்ளிகள் உள்ள இடத்தில் இரண்டு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடைகளுக்கு வருகிற குடிமகன்கள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு இத்தெருவில் உள்ள வடகத்தியம்மன் கோயில் முன்பு அமர்வதும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் பெண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக நடந்து செல்லும் கேலி செய்தும் வருகின்றனர். இதனால் தனியாக நடமாட முடியாத நிலையிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறுவதால் வங்கிக்கு வருகிற வாடிக்கையாளர்களும் பயந்து கொண்டே வரும் நிலையில் உள்ளனர். இதைப்பார்த்து, தற்போது பள்ளி மாணவர்களும் குடிபழக்கத்திற்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்தக் கடையை உடனே மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறியதை அடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.