விஷக்காய்ச்சலால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் திரண்ட மக்கள்
சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பணி, காற்று, வெய்யல் என வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் விஷக்காய்ச்சல் பரவியுள்ளது. ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டு வருகிறது.
சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பணி, காற்று, வெய்யல் என வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் விஷக்காய்ச்சல் பரவியுள்ளது. ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில தினங்களாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பொதுமக்களிடம் விஷக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் விஷக்காய்ச்சலால் ஏழை, எளிய மக்கள் திரண்டு வந்து நீண்ட கியூ வரிசையில் நின்று சிகிச்சை பெற்று மருந்துகள் வாங்கிச் சென்றனர். குறிப்பிட்ட நேரம் வரைதான் புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படுவதால் பலர் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மருந்துகள் தயார் நிலையில் இல்லை எனக்கூறப்படுகிறது. எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலம் கிராமங்கள் தோறும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.