அசோக் லேலெண்ட் லாரி அடிச்சட்ட விற்பனை நிறுவன வளாகத்தில் ஊழியர்களை அச்சுறுத்தி வந்த 89 பாம்புகள் பிடிக்கப்பட்டன. அவை கொல்லிமலை வனப் பகுதியில் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அசோக் லேலெண்ட லாரி அடிச்சட்ட விற்பனை நிறுவனம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் அதிகளவில் நடமாடிய பாம்புகள் ஊழியர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து, அந்நிறுவனத்தினர் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து பாம்பு பிடிப்பதில் அனுபவம் பெற்ற மாரியப்பன், பாண்டி, லட்சுமணன் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரை முயன்று நிறுவன வளாகத்திலுள்ள முட்புதர்களில் தங்கியிருந்த 89 பாம்புகளை பிடித்தனர். நாகம், கோதுமை நாகம், கட்டுவிரியன், சாரை, ஊது சுருட்டு ஆகிய வகைகளைச் சேர்ந்த இந்த பாம்புகள் சுமார் 1 அடி முதல் 10 அடிக்கு மேலும் இருந்தன. தொடர்ந்து பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டு மாவட்ட வன அலுவலர் ஆர்.பத்மாவதி மேற்பார்வையில் வெள்ளிக்கிழமை கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர், அனைத்து பாம்புகளும் வன பாதுகாவலர் கனகரத்தினம் முன்னிலையில் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.