சிதம்பரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அகற்றம்: கவுன்சிலர்கள் போராட்டம் எதிரொலி
சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள லால்கான்தெரு, மேலவீதி பஸ்நிறுத்தம், திருவள்ளுவர் தெரு, கொத்தவால்தெரு காய்கறி மார்க்கெட், பஸ்நிலையம் ஆகிய
சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர்கள் போராட்டம் எதிரொலியாக நகரின் மையப் பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள லால்கான்தெரு, மேலவீதி பஸ்நிறுத்தம், திருவள்ளுவர் தெரு, கொத்தவால்தெரு காய்கறி மார்க்கெட், பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மூத்த நகரமன்ற உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், திமுக நகரமன்ற கொறடா த.ஜேம்ஸ்விஜயராகவன் ஆகியோர் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் கடந்த அக்.7-ம் தேதி உதவிஆட்சியரை எம்.அரவிந்திடம் மனு அளித்து வலியுறுத்தினர். மேலும் மேற்கண்ட கடைகள் அகற்றாவிடில் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
இந்நிலையில் உதவிஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம், துணைக்கருவூலம், நகராட்சி ஆகிய அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் லால்கான்தெருவில் உள்ள டாஸ்மாக மதுபானக்கடை அகற்றப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள பொய்யாப்பிள்ளைச்சாவடி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த கடை அகற்றப்பட்டதால் அவ்வழியே சென்ற மக்கள் எவ்வித இடையூறின்றி மகிழ்ச்சியுடன் சென்றனர். இதேபோன்று மேலவீதி பஸ்நிறுத்தம், காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள மதுபானக்கடைகளையும் அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள் உதவிஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.