சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் 50 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை எண் 68-க்கு நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஏற்காடு இடைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை விவசாயிகளிடம் விளக்கிக் கூறி அவர்களை நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்களிக்கச் செய்வதாகவும், இதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து பிரசார இயக்கம் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து சேலம் - உளுந்தூர்பேட்டை என்.எச். 68-ல் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.கோபாலகிருஷ்ணன், செயலர் டி.பழனிசாமி, பொருளாளர் கே.சின்னதுரை ஆகியோர் தலைமையில் சுமார் 100 விவசாயிகள் வாழப்பாடி பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் மூலம் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விவசாயிகளை சந்திக்கப்போவதாக அறிவித்தனர்.
இது குறித்து கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ஏற்காடு தொகுதிக்குள்பட்ட உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழப்பாடி பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்து, உரிய இழப்பீடு வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளான தக்காளி, தேங்காய் சேமிப்பு கிடங்குகள், பாக்கு விற்பனை நிலையம், குடிநீர் வசதி, வறட்சி நிவாரணம் போன்றவை வெறும் கோரிக்கைகளாகவும், அறிவிப்புகளாகவும் மட்டுமே உள்ளது.
எனவே எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்காடு தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைக் கண்டித்து நோட்டாவுக்கு வாக்களிக்க பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். பாதிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் உள்ளன. மேலும் எங்களது பிரசாரம் மூலம் தொகுதி முழுவதிலும் 25 ஆயிரம் வாக்காளர்களை நேரில் சந்தித்து நோட்டாவை பயன்படுத்த வலியுறுத்த உள்ளதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சுமார் 50 பேர்களை அனுமதியின்றி பிரசாரம் செய்ததாகக் கூறி வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.