நெல்லையில் பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி
நெல்லையில் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி பேருந்து மோதி வியாழக்கிழமை காலை பலியானார்.
மொபட் மீது அரசுப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அரியகுளத்தை அடுத்த வெல்கம் காலனியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் வனப்பேச்சி (எ) வனஜா (18). இவர், இதே பகுதியில் உள்ள சாரதா மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.
வியாழக்கிழமை காலை கல்லூரிக்கு மொபட்டில் சென்றார். தூத்துக்குடி புறவழிச் சாலையில் செல்லும்போது அந்த வழியாக வந்த பேருந்து மோதியதில், வனப்பேச்சி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.