தமிழகத்தில் ஓட்டு வங்கி அரசியல் நடைபெறுகிறது: கு.பாலசுப்பிரமணியன்
மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாராக் கொள்கையினால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைதரம் குறைந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து முற்போக்கு
தமிழகத்தில் ஓட்டு வங்கி அரசியல் நடைபெறுகிறது என முற்போக்கு சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாராக் கொள்கையினால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைதரம் குறைந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உலக வங்கியின் கடன் வாங்கி அரசு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்தால் இந்தியாவும் திவாலாகிவிடும். இந்தியாவில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேவையான பெட்ரோஸ், கேஸ் வளங்கள் உள்ளன. தனியார் வசம் கொடுக்காமல் ஒ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் பெட்ரோஸ், கேஸ் எடுக்க வேண்டும். சிமெண்ட் ஆயத்தவிலை ரூ.165-தான். ஆனால் தனியார் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து ஒரு மூட்டை ரூ330-க்கு விற்கின்றன. தனியார்மயம், தாராளமயம் கொள்கைகளினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசே நியாய விலைக்கடைகள் மூலம் சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இலவசம், மானியத்தை வழங்கி அரசை நடத்துகிறார்கள். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி சிந்திக்கவில்லை என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
கூட்டத்திற்கு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத் தலைவர் ரா.ராகவேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.பாலாஜி, துணைச் செயலர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். செயலர் நா.சுந்தரலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.இ.பாலுசாமி, துணைத் தலைவர் துரை.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ஏ.நரசிம்மன் நன்றி கூறினார்.