சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்: திருமாவளவன் சமரசம்
சிதம்பரம் அருகே குமராட்சி கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சுற்றுப்பயணம் மேற்கொண்ட விடுதலைச்
சிதம்பரம் அருகே குமராட்சி கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சுற்றுப்பயணம் மேற்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சமரசம் செய்ததால் மறியல் வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரம் அருகே கருப்பூர் கிராமத்தில் கடந்த அக்.16-ம் தேதி நள்ளிரவு கீழத்தெரு மதகு அருகே அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, மனித உரிமைக்கழகம் ஆகிய 6 கட்சி கொடிக்கம்பங்கள் இருந்தன. மர்ம நபர்கள் காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பத்தை தவிர மற்ற 5 கட்சிகளிள் கொடிக்கம்பங்களை உடைத்து, அதிலிருந்த கொடிகளை எடுத்துச் சென்று நடுத்தெரு இறக்கம் பகுதியில் கொளுத்திவிட்டு தலைமறைவாகி விட்டனர். இவ்வழக்கு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் சிற்றரசுவை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிற்றரசு கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி குமராட்சி ஒன்றியச் செயலாளர் மணவாளன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தொல்.திருமாவளவன் எம்பி காட்டுமன்னார்கோயில் செல்ல அவ்வழியே வந்த போது மறியலில் ஈடுபட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டக்கூடாது. கைது குறித்து கட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி சிதம்பரம் அல்லது குமராட்சியிலோ ஆர்ப்பாட்டம் நடத்தலாம். எனவே மறியலை கைவிட வேண்டும் என திருமாவளவன் கூறியதை அடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.