காட்டுமன்னார்கோயிலில் சாலைமறியல்: திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
காட்டுமன்னார்கோயில் அருகே வீராணநல்லூரில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி மண்ணெண்ணெய் கேனுடன் காங்கிரஸ் கட்சியினர் மற்றும்
காட்டுமன்னார்கோயில் அருகே வீராணநல்லூரில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி மண்ணெண்ணெய் கேனுடன் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே வீராணநல்லூரில் கடந்த ஒருமாதம் முன்பு டாஸ்மாக் மதுபானக்கடை தொடங்கப்பட்டது. இந்த கடை ஏற்கனவே பழஞ்சநல்லுரில் இருந்தது. அங்குள்ள மக்கள் கடையை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியது அடுத்து அந்த கடை வீராணநல்லூரில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டுவாய்க்கால் அருகே அமைக்கப்பட்டது. இந்த கடையினால் அப்பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எம்.ஆர்.கே.பொறியியல் கல்லூரி எதிரே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் பி.டி.குணசேகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும், அப்பகுதி மக்களும் சுமார் 200 பேர் திரண்டு திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். கடையை அகற்றாவிடில் தீக்குளிப்போம் என மண்ணெண்ணெய் கேனுடன் பெண்களும் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டாட்சியர் வெங்கடாஜலம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி 15 தினங்களுக்குள் கடையை அகற்றுவதாக உறுதியளித்து எழுதி கொடுத்தனர். இதனையடுத்து மக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.