விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டி தனியார் பட்டாசு ஆலையில் கடந்தாண்டு இதே நாளில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். அதை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு உறுதிமொழியேற்கவும், நினைவு அஞ்சலி செலுத்தவும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
எனவே அதன் அடிப்படையில் முதலிப்பட்டியில் பொது மைதானத்தில் நினைவு ஸ்தூபி அருகே நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் எம்.சி.பாண்டியன் முன்னிலை வகித்தார். முதலிபட்டி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பாதுகாப்பாகவும், விபத்தின்றியும் பணிகள் மேற்கொள்ள உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Advertisement
இந்நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ சங்கத்தின் நகரச் செயலாளர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் விபத்து குறித்து நினைவு கூறினார்கள். இதில், பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த ஆலைகளின் வளாகத்தில் விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பாக பணிகள் மேற்கொள்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.