சகஜானந்தா மணிமண்டபத்திற்கான தேர்வு செய்த இடத்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ. கோரிக்கை
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபம் கட்ட ஊருக்கு வெளியே தேர்வு செய்த இடத்தை ரத்து செய்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே தமிழகஅரசு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபம் கட்ட ஊருக்கு வெளியே தேர்வு செய்த இடத்தை ரத்து செய்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே தமிழகஅரசு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், சிதம்பரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கண் திறந்திட்ட சுவாமி சகஜானந்தா நினைவை போற்றும் வகையில், அவருக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும் என்ற எனது கோரிக்கையினை ஏற்று சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்திலேயே மணி மண்டபம் கட்டப்படும் என்ற தங்களது அறிவிப்பு அனைத்து பகுதி மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. மணி மண்டபம் கட்டுவதற்கு சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் சிதம்பரம்-சீர்காழி சாலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட இடம் சுவாமி சகாஜானந்தாவிற்கு உரிமையான இடமாகும். இந்த இடத்திற்கு அருகாமையில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. இந்த இடத்தில் மணி மண்டபம் கட்டுவதே சாலச்சிறந்தது. இந்த இடத்தின் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றவர்களும் மணி மண்டபம் கட்டுவதற்கு ஏதுவாக வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த இடத்தை ஆய்வு செய்த அப்போதைய உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் மேற்கண்ட இடம் குறித்த அனைத்து வித அம்சங்களையும் ஆய்வு செய்ததுடன், கடலூர் அரசு வழக்குரைஞருடன் கருத்துரை பெற்று மேற்கண்ட இடத்தில் மணிமண்டபம் அமைவதே அனைத்து வகையிலும் பொருத்தமானது என விரிவான கடிசதம் அரசுக்கு சமர்பித்துள்ளார்.
ஆனால் தற்போது சிதம்பரம் நகரிலிருந்து 5 கி.மீட்டருக்கு அப்பால் புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கான புதிய இடத்தை அதிகாரிகள் திடீரென மாற்றி தேர்வு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாக அறிகிறோம். எனவே தமிழக முதல்வர் பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில், சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கு அருகாமையிலேயே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மணி மண்டபம் அமைத்திட உத்திரவிட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.