சிதம்பரம் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சிதம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு புதன்கிழமை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி வளாகத்தை சோதனையிட்டதில் புரளி என தெரியவந்தது.
சிதம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு புதன்கிழமை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி வளாகத்தை சோதனையிட்டதில் புரளி என தெரியவந்தது.
இதனால் மாணவ, மாணவியர்கள் வெளியேற்றப்பட்டு புதன்கிழமை வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அலுவலகத்திற்கு புதன்கிழமை காலை 9.50 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பில்லாஹரி என்பவர் பேசுவதாகவும், கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், வசந்தகுமாரி ஆகியோர் கல்லூரிக்கு விரைந்து சென்று மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.
Advertisement
பின்னர் கடலூலிருந்து சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் மோப்பநாய் ஜாக் வரவழைக்கப்பட்டு கல்லூரி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் கிடைக்காததால் வெடிக்குண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து மாணவ, மாணவியர்கள் வெளியேற்றப்பட்டதால் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அந்த தொலைபேசி அழைப்பு சிதம்பரம் மன்னார்குடித்தெருவில் உள்ள துர்கா மளிகை கடையில் உள்ள பொது தொலைபேசியிலிருந்து யாரோ மர்மநபர் பேசியுள்ளது தெரியவந்து, அந்த மர்மநபரை தேடி வருகின்றனர்.