தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் பலியான பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் அருகே உள்ள களையூரைச்சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ஜெயச்சந்திரன் என்ற சந்துரு(26). இவர் பொறியியல் படிப்பு முடித்து புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.சபரிமலை போக மாலை அணிந்திருந்த அவர் குருசாமி வைத்திலிங்கம் தலைமையில் ஜெயச்சந்திரன் உள்பட 17 பேர் கடந்த 11-12-2010-ம் தேதி நள்ளிரவில் வேனில் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.மதுரை-தூத்துக்குடி சாலையில் திருச்செந்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, சபரிமலை பக்தர்கள் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் குருசாமி வைத்திலிங்கம், டிரைவர் தட்சணாமூர்த்தி, விரிவுரையாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஜெயச்சந்திரனின் தந்தை ஜெகநாதன் இழப்பீடு ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடலூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி குமரகுரு மேற்பார்வையில் ஓய்வுபெற்ற நீதிபதி வேணுகோபால், வழக்குரைஞர் தேவநாதன் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ஜெயச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கணேசன் ஆஜர் ஆனார்.இதுதவிர ஒரு சிவில் வழக்கு உள்பட மேலும் 21 வழக்குகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. அந்த வழக்குகளில் 27 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.