காட்டுமன்னார்கோயில் அருகே பாசன வாய்க்கால் உடைப்பு: விவசாயம் பாதிப்பு
காட்டுமன்னார்கோயில் அருகே ராதாம்பூர் பாசன வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு வெள்ளியங்கால் ஓடையில் கலந்து நீர் வீணாக கடலுக்கு செல்வதால், அப்பகுதியில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரின்றி அவதியுற்றுள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே ராதாம்பூர் பாசன வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு வெள்ளியங்கால் ஓடையில் கலந்து நீ்ர் வீணாக கடலுக்கு செல்வதால், அப்பகுதியில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரின்றி அவதியுற்றுள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே வடவாறிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ராதாம்பூர் வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் மூலம் மேலராதாம்பூர், கீழராதாம்பூர் பகுதியில் சுமார் 750 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த வாய்க்கால் கடந்த இரண்டு தினங்களாக உடைப்பெடுத்து, அந்த நீர் அருகாமையில் உள்ள மணவாய்க்காலில் மற்றும் வெள்ளியங்கால் ஓடையில் கலந்து கடலுக்கு வீணாக செல்கிறது. இதனால் சுமார் 750 ஏக்கர் நிலங்களில் நேரடி நெல் விதைப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் நீரின்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அடைப்பினை பொதுப்பணித்துறையினர் சரி செய்யாததால், இந்நிலையில் திங்கள்கிழமை அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து 2 டிராக்டர்கள் மற்றும் பொக்லீன் மூலம் தாங்களே தற்காலிகமாக அடைப்பினை சரி செய்துள்ளனர்.
இதுகுறித்து கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்தது: வடவாற்றிலிருந்து பிரியும் ராதாம்பூர் வாய்க்கால் அருகே 20 அடி பள்ளத்தில் மணவாய்க்கால் உள்ளது. இந்த இருவாய்க்கால்களும் அருகாமையிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்வதால் அடிக்கடி உடைப்பெடுத்து நீர் வீணாகிறது. இருவாய்க்கால்கள் நடுவே தடுப்பு சுவர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று அரசு கடந்த சில ஆண்டுகள் முன்பு ரூ.25 லட்சம் நிதிஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த பணி குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்படாததால் வந்த நிதி திரும்பி சென்றுவிட்டது என்கிறார் பி.விநாயகமூர்த்தி.
Advertisement