ஈரோடு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திங்கள்கிழமை நடத்திய திடீர் சோதனையின்போது கணக்கில் வராத ரொக்கம் ரூ.51,500-யை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு அண்ணாஜீ வீதியில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் வேணுகோபால். நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் உள்பட 264 கூட்டுறவுச் சங்கங்களில் தணிக்கை செய்யும் பணி இங்குள்ள 64 தணிக்கையாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.கூட்டுறவுச்சங்கங்களில் தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள் தங்களது கணக்கை, உதவி இயக்குநரிடம் ஒவ்வொரு மாதமும் கடைசிநாள் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுவது வழக்கம். இவ்வாறு தாக்கல் செய்யும்போது இந்த கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பிரிவில் தணிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் மாத கடைசி நாளான திங்கள்கிழமை வழக்கம்போல யாரோ சில தணிக்கையாளர்கள் புகார் செய்தனர்.இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். உதவி இயக்குநர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை செய்தபோது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.51,500-யை பறிமுதல் செய்தனர்.அங்கிருந்த உதவி இயக்குநர் மற்றும் தணிக்கையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த பணத்துக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக துறை வாரியாக நடவடிக்கை எடுக்கும்படி கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.