வீராணம்ஏரிக்கரை கிராமங்களில் தொடர் கொள்ளை: ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரிக்கரையில் உள்ள நத்தமலை, மானியம் ஆடூர் கிராமங்களில் திங்கள்கிழமை இரவு மர்மநபர்கள் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ரூ.5 லட்சம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரிக்கரையில் உள்ள நத்தமலை, மானியம் ஆடூர் கிராமங்களில் திங்கள்கிழமை இரவு மர்மநபர்கள் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே நத்தமலை கிராமத்தில் சிவக்குமார் மனைவி சக்தி (28). இவர் திங்கள்கிழமை தனது கணவருடன் வீட்டில் படுத்திருந்த போது, மர்மநபர்கள் உள்ளே புகுந்து கணவர் சிவக்குமாரை கட்டையால் தாக்கிவிட்டு, சக்தியின் தாலி கயிறை அறுத்துச் சென்றனர். அதற்கடுத்து மானியம் ஆடூர் கிராமத்தில் அபுல்ஹசன் மனைவி மஸ்துஹாபேகம் தனது வீட்டை பூட்டிக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 15 பவுன் நகைகள்,10 பட்டுப்புடவைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், பத்திரம், ஹோம்தியேட்டர் டிவி ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் நத்தமலை கிராமத்தில் வடிவேல் என்பவர் வீட்டிலும், மானியம் ஆடூர் கிராமத்தில் அன்சாரி, ஹக்கீம், பாஷா ஆகியோரது வீடுகளில் திருட முயன்றுள்ளனர். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக்கொண்டதால் மர்மநபர்கள் தப்பிஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தொடர் திருட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பொருள்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மஸ்துஹாபேகம், சக்தி ஆகியோர் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் புருனே ஆகியவை வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.