மாநிலக் கட்சிக்கு வாக்களித்தால் குழப்பமே மிஞ்சும்; மத்தியில் நிலையான அரசு அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள்: எச்.ராஜா
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜா பேசினார்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜா பேசினார்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜா தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி அவர் பேசியபோது,
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக மோடி வரவேண்டும். ஏன் வர வேண்டும் என்றால், 12 வருட காலத்தில் குஜராத் மாநிலத்தை வளர்ச்சி கொண்ட மாநிலமாக மாற்றியவர் என்று பெருமைக்குரியவர் அவர். அது போல் நாட்டையும் வளர்ச்சி கொண்ட நாடாக மாற்ற வல்லமை பொருந்திய ஒருவராக அவரை நாம் கொண்டு வரவேண்டும்.
Advertisement
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான். மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கியுள்ளேன் என்று கூறுகிறார். எந்த மாணவர்களுக்காவது பிணை இல்லாமல் கடன் வழங்கியுள்ளார்களா? இப்போது அனைத்து வீடுகளுக்கும் கடிதம் போடுகிறார்கள்... நாங்கள் உங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கடன் கொடுத்திருக்கிறோம்; அதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கடிதம் அனுப்புகிறார்கள்.
நான் வெற்றி பெற்றால் இந்தப் பகுதியில் சூரிய ஓளியில் 20 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் அமைப்பேன். மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அரசியல் குழப்பத்திற்குத்தான் வழிவகுக்கும். மத்தியில் நிலையான அரசு அமைய, தேசிய கட்சியான பாஜகவுக்கு வாக்களிப்பதே நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழி உதவும் என்று பேசினார்.