சிதம்பரம் ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே ஸ்ரீ பாண்டியநாயகம் கோயில் என்கிற ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்கு வள்ளி தெய்வானை உடனாகிய மயில் மீதமர்ந்த சண்முகர்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வடக்குகோபுரம் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெள்ளிக்கிழமை இரவு (ஏப்.4)கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே ஸ்ரீ பாண்டியநாயகம் கோயில் என்கிற ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்கு வள்ளி தெய்வானை உடனாகிய மயில் மீதமர்ந்த சண்முகர் வீற்றுள்ளார். சிறப்பு வாய்ந்த இக்கோயில் திருப்பணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. பின்னர் நடராஜர் கோயிலை அரசு இந்து அறநிலையத்துறை ஏற்று நிர்வாக அதிகாரியை நியமித்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது திருப்பணிகள் நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் திருப்பணி நின்று போனது.
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீட்சிதர்களை கோயிலை நிர்வகிக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அண்மையில் கடந்த ஜன.24-ம் தேதி நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மடம் சார்பில் ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் ரூ.4 கோடி செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்படும் என தெரிவித்தார். விரைவில் திருப்பணி தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபாண்டியநாயகம் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இருவேளைகளிலும் வீதி உலாவும், ஏப்ரல் 12-ம் தேதி சனிக்கிழமை தேர் திருவிழாவும், ஏப்.13-ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.