முகப்பு
தற்போதைய செய்திகள்

திராவிடக்கட்சிகள், தமிழக மக்களை கையேந்த வைத்துள்ளது: காடுவெட்டி ஜெ.குரு எம்எல்ஏ

50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகள், இலவசங்களை வழங்கி தமிழக மக்களை கையேந்த வைத்துள்ளது என வன்னியர் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகள், இலவசங்களை வழங்கி தமிழக மக்களை கையேந்த வைத்துள்ளது என வன்னியர் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குரு தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே பி.முட்லூரில் தேசிய ஜனநாய கூட்டணி பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து அவர் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அடுக்குமொழியில் என பேசி 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி செய்த சாதனை என்ன? மதுக்கடைகளை திறந்து தமிழக மக்களை சீரழித்ததுதான் சாதனை. ஜெயலலிதா என்ன சாதனை செய்தார். காவிரி உரிமையை மீட்போம், கச்சத்தீவை மீட்போம், முல்லைப் பெரியாறு உரிமையை மீட்போம், ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் என சொன்னார். 3 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா அனைத்தையும் மீட்டாரா? ஆனால் தற்போது செய்கிறோம், செய்கிறோம் என வாக்கு கேட்டு வருகிறார். கருணாநிதி டிவி, இலவச அரிசி, வேட்டி சேலை ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். ஜெயலலிதா மிக்சி, கிரைண்டர், பேன், ஆடு, மாடு ஆகியவற்றை வழங்கினார். இதுதான் இருவரது சாதனையாகும். குடிக்காதீங்க, படிங்க என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகிறார். ஆனால் இவர்கள் படிக்காதீங்க, குடிங்க எனக்கூறுகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சியில் பேசினா வழக்கு, உட்கார்ந்தா வழக்கு, நின்றால் வழக்கு என அடுக்கு, அடுக்கான வழக்குகள். ஏன் உங்கள் குறையை சுட்டிக்காட்டக்கூடாது. பேசினால், அவதூறு வழக்கு. அனைத்து கட்சியினர் மீதும் வழக்குகள். இந்தியாவிலேயே அதிகளவில் வழக்குகளை போட்டு கொடுமைபடுத்தியவர் ஜெயலலிதாதான். தருமபுரி, மரக்கானம் கலவத்தில் 3 பேர் இறந்தனர். இதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல், பாமக நிறுவனர் ராமதாஸை கைது செய்தார். பாமகவினர் 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். 134 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தார். என் மீது பல வழக்குகள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை சிறையில் இருக்கத் தயார்?.

இலவசங்களை நிறுத்திவிட்டு காவிரி, கொள்ளிடக்கரைகளை பலப்படுத்துங்கள், அணைகளை கட்டி நீரை தேக்குங்கள், மேட்டூரில் 50 அடி ஆழம் வண்டல் மண் உள்ளது. அதனை தூர்வாருங்கள், ஏரி, குளங்களை தூர்வாருங்கள். இதனையெல்லாம் செய்தால்தான் சாதனை. இலவசங்களை கொடுத்தது சாதனை அல்ல. தமிழக மக்கள், மாற்றத்தை விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்திய நாட்டின் வலிமையான பிரதமராக நரேந்திரமோடி வர வேண்டும். அப்போதுதான் இந்தியா வளமான நாடாக மாறும் என ஜெ.குரு எம்எல்ஏ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.