ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 22 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது : குழந்தையை மீட்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்து 20 மணி நேரம் ஆகும் நிலையில், மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்து 20 மணி நேரம் ஆகும் நிலையில், மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில், இரவு 8 மணிக்கே குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிபடுத்திவிட்டனர்.
எனினும், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகிவிடக் கூடாது என்பதால் அதனை பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை.
குழந்தை விழுந்த குழிக்குள் மண் மூடிக் கொண்டதால், நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் ஆக்ஸிஜன் செலுத்துவதையும் நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில், மதுரை , கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்த சிறப்பு மீட்புக் குழு நேற்று இரவு 12 மணி முதல், இன்று காலை 8 மணி வரை அவர்களுக்குரிய பாணியில் குழந்தையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களது எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன. 8 மணிக்கு மேல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் முயற்சியும், 11 மணிக்கு மேல் தோட்டாக்கள் வைத்து பள்ளம் தோண்டும் பணியும் நடந்தது.
48வது அடியில் குழந்தை சிக்கியிருக்கும் நிலையில், 35 அடி வரை ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு பாறை இருந்ததால், 4 முறை தோட்டக்களை வெடிக்க வைத்து பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
46வது அடி வரை பள்ளம் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், எஸ்.பி. முத்தரசி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.