விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சாவு
பெரம்பலூரில், விபத்தில் காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூரில், விபத்தில் காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சின்னசாமி (54). இவர், பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு துறைமங்கலத்திலிருந்து அவரது நண்பரை பார்ப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பாலக்கரை பகுதியில் இருந்த ரவுண்டானா அருகே வந்தபோது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னசாமி பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன்வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.