நாகூரிலிருந்து தங்கம் கடத்திய 2 பேர் கைது 14.08 கிலோ தங்கம் பறிமுதல்
நாகையை அடுத்த நாகூரிலிருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்திய 2 பேர் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகையை அடுத்த நாகூரிலிருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்திய 2 பேர் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகையை அடுத்த நாகூரிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில், வருவாய் நுண்ணறிவுப் பிரிவின் சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதி அலுவலர்கள் நாகூர்- காரைக்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நாகூரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், அந்த காரில் 14.08 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் தங்கத்தைக் கொண்டுச் சென்ற 2 பேரை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர்கள், நாகூரைச் சேர்ந்த இக்பால் மகன் முஸ்தபா கமால்(24), முகமது இப்ராஹிம் மகன் முகமது இத்ரீஸ் மரைக்காயர்(32) என்பதும், அவர்கள் நாகூரிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரும், தங்கம் மற்றும் காருடன் நாகை சுங்கத் துறை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.