மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
பழனி தாலுகா அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி கிளை சார்பில் முற்றுகைப் போராட்டம்
பழனியில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பழனி தாலுகா அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி கிளை சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் நகரதலைவர் அப்பு என்ற வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர்மன்ற தலைவர் இராஜமாணிக்கம், முன்னாள் தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் அருள்செல்வன்,நகர பொருளாளர் மோகனா, துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கிடவும், இதற்கான ஊதியத்தை மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாகவே வழங்கிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நியாய விலைக்கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பொருட்களை வழங்கவும், அரசுத்துறை அலுவலகங்களிலும், பேருந்து நிலையத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதான வகையில் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை அமைக்கவும், மாதாந்திர ஊனமுற்றோர் பராமரிப்புத் தொகையை ரூ.1,000த்தில் இருந்து ரூ.3,000 மாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5,000மாகவும் உயர்த்தி வழங்கிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சங்கத்தின் நகர துணைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.