முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்:வேல்முருகன்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

 தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

 மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. தமிழர்களுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமான  இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பதை முந்தைய காங்கிரஸ் ஆட்சி குப்பை தொட்டியில் வீசியது போல அல்லாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் வகையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள  தீர்மானங்களுக்கு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழர்களின் உரிமைக்காக பேராடும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பாஜகவினர் ஒருமையில் பேசி மிரட்டி  வருகிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. தமிழக தலைவர்களை மிரட்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தமிழகத்துக்குள் நுழைய தடைவிதித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.

 தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவ விடுதலை இயக்கத் தலைவர் அலங்காரபரதர் தனது ஆதரவாளர்களுடன் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் இணைந்தார். நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுச் செயலர் காவேரி, பொருளாளர் அக்ரம் கான், தென் மண்டல செயலர் தமிழ்நேசன், மாவட்டச் செயலர் மாரிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.