திருமாவளவன் இருக்கும் அணிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பேசினார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடந்த பாட்டாளி இளைஞர் எழுச்சி மாநாட்டில் அவர் மேலும் பேசியது, பாமகவால் வளர்ந்த பண்ருட்டியை சேர்ந்த 2 பேர் இப்போது அதிமுகவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஒருவர் மதுரையில் அரசியல் செய்து கொண்டிருந்த விஜயகாந்தை வட மாவட்டங்களில் கொண்டு வந்து விட்டு வன்னியர் இன மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மற்றொருவருக்கு எந்த கட்சியிலும் இடம் கிடைக்காத நிலையில் கடைசியில் அதிமுகவை நாடிச்சென்றுள்ளார்.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே இலவசங்களை அளித்து நாட்டை சீரழித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் நாட்டு மக்கள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை. நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாயம்,சுகாதார மேம்பாட்டுக்கு மட்டுமே இலவசங்களை அளி்ப்போம்.
பாமகவுக்கு எதிரான நடவடி்ககை என்ற பெயரில் வன்னியர்களை கடுமையாக துன்புறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நடவடிக்கையால் பாமக ஜாதி அரசியல் செய்யவி்ல்லை என்றும், ஜெயலலிதா தான் ஜாதி அரசியல் செய்கிறார் என்பதையும் மக்கள் உணர்ந்துள்ளனர். கர்நாடக முதல்வர் அங்கு நடந்த ஜாதி அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதுபோன்ற எண்ணம் தமிழக முதல்வருக்கு ஏன் இல்லை
தலித் மக்கள் அனைவருமே எங்களுக்கு விரோதிகள் அல்ல. அந்த போர்வையில் இருந்து கொண்டு பிற சமுதாய மக்களை குறிப்பாக பெண்களை குறிவைத்து செயல்படும் ஒரு கும்பலை தான் நாங்கள் கண்டிக்கிறோம். எங்கள் சமுதாய பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறுவது தவறா? கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திருமாவளவனை அனுப்பிவைக்கும் அளவுக்கு கருணாநிதியின் நேரம் இப்படி ஆகிப் போய்விட்டது. இந்த தேர்தலில் திருமாவளவன் இருக்கும் அணிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீதிமன்றத்தால் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததுள்ளது தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படும் நாடகம். இதனால் காங்கிரஸோடு கூட்டணி வைக்க கருணாநிதி கண்ட கனவு நிறைவேறாமல் போய்விட்டது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படவும், அனைத்து சமுதாய மக்களும் நல்ல நிலையில் வாழவும், தமிழகம் சிறப்பான நிலையை அடையவும் பாமக ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும். பாமகவின் கொள்கைகளை கிராம மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது இளைஞர்களின் பொறுப்பு. கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் இரா. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைப்பொதுச்செயலர்கள் பழ.தாமரைக்கண்ணன், திருஞானம், மாநிலத்துணைத் தலைவர் சண்முகம், மாவட்டச் செயலர்கள் தர்மலிங்கம், ஜெகன், செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.