நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து ஜன.20-ல் மறியலில் ஈடுபட புவனகிரி மக்கள் முடிவு
நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளை கண்டித்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் ஜன.20-ம் தேதி வெள்ளாற்று பாலம் பாதுகாப்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முடிவு
நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளை கண்டித்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் ஜன.20-ம் தேதி வெள்ளாற்று பாலம் பாதுகாப்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
புவனகிரி வெள்ளாற்று பாலம் சம்பந்தமாக ஜன.6-ம் தேதி புவனகிரி ஸ்ரீமூகாம்பிகை திருமண மண்டபத்தில் வெள்ளாற்று பாலம் பாதுகாப்பு குழுவினர்கள், ஊழல் எதிர்ப்பு இயக்கம், அனைத்து கட்சி தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவதாக உறுதியளித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் யாரும் வரவில்லை.
சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மட்டுமே வந்திருந்தார். அவரும் கேட்ட தகவல்களுக்கு உரிய பதில் தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரியை கண்டித்து வருகிற ஜன.20-ம் கதேதி திங்கள்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு இயக்க சட்ட ஆலோசகர் அ.குணசேசரன் தெரிவித்துள்ளார்.