மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற வேண்டும். அதற்காக அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, பிறகு தொண்டர்களிடம் பேசுகையில், மத்திய அரசை வழி நடத்தும் அதிகாரம் அதிமுகவுக்கே கிடைக்க வேண்டும்.
நமது அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளையும்; திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்களையும்; திமுக-வின் தன்னலக் கொள்கைகளையும் பட்டியலிட்டு; பட்டிதொட்டி எங்கும் பரப்பி அவர்களுடைய முகத் திரையை நீங்கள் எல்லாம் கிழித்து எறிய வேண்டும்.
தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் மற்றும் திமுக-விற்கு, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத வகையில் உங்களுடைய களப் பணி அமைய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படவும்; உரிமைகள் நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றால்; மத்திய அரசை வழி நடத்தும் அதிகாரம் நமது கைக்கு வர வேண்டும். இதனை மனதில் நிலை நிறுத்தி “நாற்பதும் நமதே” என்ற இலக்கினை அடைய நீங்கள் இன்று முதல் அயராது உழைக்க வேண்டும். உங்களோடு இணைந்து நானும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.