முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலி: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நேரில் ஆய்வு

சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை அன்று புகைபோக்கி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இரு தொழிலாளர்கள் மரணமடைந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை அன்று புகைபோக்கி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இரு தொழிலாளர்கள் மரணமடைந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் ஐஎல்எஃப்எஸ் எனும் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மின்உற்பத்தி நிறுவனம் அமைக்கும் பணியில் தமிழ்நாடு,  ஆந்திரா, பீகார், மேற்க்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இந்நிறுவனத்தின் 900 அடி உயரமுள்ள புகைபோக்கி உயர் கோபுரத்தில் 320 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கி பணியாற்றிக் கொண்டிருந்த  பீகாரை சேர்ந்த சோனுராஜ்செளத்ரி(26), முகீத்கான்(31) உள்ளிட்ட இரு தொழிலாளர்கள் கயிறு அறுபட்டதால் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். வினோத்குமார் (21) என்ற வாலிபர் கால்துண்டிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் என்றும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கடந்த இரு நாட்களாக தனியார் மின்உற்பத்தி நிறுவன கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தனியார் மின்உற்பத்தி நிலையத்திற்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். மேலும் வேலைநிறுத்தத்தை ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது இறந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களுக்கு ரூ 160 தினக்கூலி கொடுத்து, 14 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் என்றும், கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, தங்குவதற்கான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இதுகுறித்து கேட்டால் குண்டர்களால் மிரட்டலுக்கு ஆளாகிறோம் என தொழிலாளர்கள் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.

பின்னர் தொழிலாளர்கள் மத்தியில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் இங்கு பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால்  மார்க்சிஸ்ட் கட்சி இப்பிரச்சனையை விட்டு விடாது. உள்ளுர் குண்டர்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கவும், நிவாரணம் பெற்றுத்தரவும், குறைந்தபட்ச தினக்கூலி உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி போராடும் என தெரிவித்தார். எம்எல்ஏவுடன் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதனை அடுத்து கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் தனியார் மின் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்தை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.