சிதம்பரம் அருகே பவர் கம்பெனியில் உயர் கோபுரத்திலிருந்து கீழே விழுந்ததில் மேலும் ஒருவர் சாவு
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான (ஐஎல்எஃப்எஸ்) மின் உற்பத்தி நிறுவனத்தில் சனிக்கிழமை 900 அடி உயரமுள்ள புகைபோக்கி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து புதுச்சேரி
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான (ஐஎல்எஃப்எஸ்) மின் உற்பத்தி நிறுவனத்தில் சனிக்கிழமை 900 அடி உயரமுள்ள புகைபோக்கி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் (21) என்ற வாலிபர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் ஐஎஸ்எஃப்எஸ் என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவத்தில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பீகார், ஆந்திரா, உத்திரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) காலை கம்பெனியில் 900 அடி உயரமுள்ள சிமினி கோபுரத்தில் 320 அடியில் கயிறு கட்டிக்கொண்டு உள்புறமாக மராமத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கயிறு அறுந்ததில் மூன்று பேர் கீழே விழுந்தனர்.
இவ்விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாசெளத்திரி மகன் சோனுராஜ் செளத்திரி (26), சலாவுதீன்கான் மகன் முகித்கான் (31) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஜியாவுதீன் மகன் வினோத்குமார் (21) என்பவர் கால் துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத்குமார் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.