முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயத்தை மீட்க மரங்கள் வளர்க்க வேண்டும்: நடிகர் விவேக்

கோபாலசமுத்திரம் கிராம உதயம், கிரீன்குளோப் அமைப்புகள் சார்பில் திருநெல்வேலி நகரில் அருணகிரி திரையரங்கில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

மழை வளம் குறைந்து நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே விவசாயத்தை மீட்க அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்தார்.

கோபாலசமுத்திரம் கிராம உதயம், கிரீன்குளோப் அமைப்புகள் சார்பில் திருநெல்வேலி நகரில் அருணகிரி திரையரங்கில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்து கொண்டு, கிராம உதயம் அமைப்பை சேர்ந்த மகளிர் குழுவினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசியதாவது: பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 21.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.மழை வளம் குறைந்த காரணத்தால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் ஆதாரம் குறைந்து விவசாயம் அருகி வருவதால் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக விற்கும் சூழல் உள்ளது. ஆகவே விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் வீட்டிற்கு 2 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயத்தை மீட்க முடியும். கிராம உதயம் அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு 1 லட்சம் கி.மீ தொலைவில் 200 கோடி மரங்களை நடத் திட்டமிட்டுள்ளது.

திரைப்படங்கள் வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்படுவதுண்டு. நான்தான் பாலா திரைப்படம் மக்களிடம் நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எடு்க்கப்பட்டுள்ளது. மனிதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது.அனைவரும் சமம். வன்முறை கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி படம் எடுக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் செல்முருகன், திரைப்பட தயாரிப்பாளர் லாரன்ஸ், திரையரங்கு உரிமையாளர் ஏ. பரசிவம், கிராம உதயம் மேலாளர் எஸ். தமிழரசி, வழக்குரைஞர் எஸ். பகத்சிங், தன்னார்வ தொண்டர்கள் ஏ. சேகர், எம். பாலசுப்பிரமணியன், தூய சவேரியர் கல்லூரி பேராசிரியர் சேவியர்ஆண்டனி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி, வேம்பு, மலை வேம்பு, பூவரசு, புங்கை, வேங்கை, தென்னை, எலுமிச்சை உள்பட 41 வகையான 1 லட்சத்து 42 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர் பி. பழனி வரவேற்றார். தன்னார்வ தொண்டர் ஜெ. ஸ்டெல்லா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →