முகப்பு
தற்போதைய செய்திகள்

பேட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதிக்கு பெரும்பாலும் காலையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுமாம். ஆனால், இதனை சிலர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பேட்டையில் நிலவி வரும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதிக்கு பெரும்பாலும் காலையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுமாம். ஆனால், இதனை சிலர் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் 4-வது தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறதாம். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலத்தடிநீரைக் கொண்டு சமையல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், குடிநீர் விநியோகத்தை சீராக்கக்கோரி ரகுமான்பேட்டை பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் பேட்டை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவலறிந்ததும் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அழகுதுரை, உதவி ஆய்வாளர்கள் சொர்ணராணி, அன்வர்உசேன், ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.மாநகராட்சி அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்துசெல்வோம் என பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி இளநிலை பொறியாளர் சேகர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரகுமான்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிக்கும் காலையில் 2 மணி நேரம் தடையின்றி குடிநீர் வழங்கவும், விதிகளை மீறி மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். திங்கள்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராக இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் மறியலால் பேட்டை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →