சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படாததை கண்டித்து பிப்.5-ல் ஆர்ப்பாட்டம் நடத்த கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வே.ராஜரத்தினம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்பி, சிதம்பரம் டிஎஸ்பி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது ரிட் மனு தாக்கல் செய்தார்.
ரிட் மனு (WP No.4846/ 2014) நீதிபதி பி.ராஜாராம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.