அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் வழங்குவதில் தாமதம்: வேதனையில் ஆசிரியர்கள்
சிதம்பரம் சார் கருவூலத்தில் உரிய முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் மார்ச் 6-ம்
சிதம்பரம் சார் கருவூலத்தில் உரிய முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் மார்ச் 6-ம் தேதிதான் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்க பல ஆண்டுகளாக எலக்டிரானிக் கிளயரன்ஸ் சர்வீஸ் எனப்பும் ECS முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் காலதாமதம் முற்றிலும் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் மாத இறுதிநாள் அன்று சம்பந்தப்பட்ட ஊழியரின் மற்றும் ஆசிரியரின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இ-பே எனப்படும் 9.1 சாஃப்ட்வேரில் ஊதிய பில்கள் தயாரிக்கப்படுவகால், ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதிக்குள் சம்பள பில்களை சம்பந்தப்பட்ட சார் கருவூலத்தில் சமர்பித்து டோக்கன் போட வேண்டும். கடந்த மாதம் பிப்ரவரி என்பதால், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் வருமானவரி கணக்கிற்கு படிவம், ஊதிய பில்லுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும். பல அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பில்கள் 20-ந் தேதிக்கு முன்னதாகவே சமர்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்.25-ம் தேதி சிதம்பரத்தில் பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு முன்கூட்டியே தெரிந்தும், சார்கருவூலத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சார் கருவூலத்தில் யுபிஎஸ் என்ற மின்சாரம் சேமிப்பு கருவி இருந்தும் சரியாக பராமரிக்கப்படாததால் உபயோகமற்ற நிலையில் உள்ளது.
இதனால் பிப்ரவரி மாத ஊதிய பில்கள் பாஸ் ஆகாமல் தேங்கின. இதனால் பிப்ரவரி மாதம் ஊதியம், மார்ச் 6-ம் தேதிதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கில் காலதாமதமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக வரவு வைக்கப்பட்டதால், மாத ஊதியத்தை நம்பியே குடும்பம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.