கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்களை அகற்ற இன்று இறுதிநாள்: மண்டல தேர்தல் அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு
சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனுமதியின்றி உள்ள கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்களை மார்ச் 13-ம் தேதி வியாழக்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என மண்டல தேர்தல்
சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனுமதியின்றி உள்ள கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்களை மார்ச் 13-ம் தேதி வியாழக்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என மண்டல தேர்தல் அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் மண்டல தேர்தல் அலுலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். வட்டாட்சியர் எம்.விஜயா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் எம்.ஆறுமுகம், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் கஜேந்திரன், ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் ராஜவேலு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிதல் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அனைத்கையும் கடைபிடிக்க மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வலியுறுத்திப்பட்டது. மேலும் நன்னடத்தை விதிமுறைகள் அடங்கிய செய்முறை விளக்க கையேடு அனைத்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது.