முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜதந்திரம் படைத்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

ராஜதந்திரம் படைத்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும்,அப்போது தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் நிலைநாட்டப்படும் என்றார் முன்னாள் அமைச்சர்

Updated On : 13 மார்ச், 2014 at 4:42 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:12 AM

ராஜதந்திரம் படைத்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும்,அப்போது தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் நிலைநாட்டப்படும் என்றார் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

 கடலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதிதெருவில் பிரசார பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடந்தது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்யசி.சம்பத் தலைமை வகித்தார். நெய்வேலி எம்எல்ஏ எம்பிஎஸ். சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ கோ.அய்யப்பன் முன்னிலை வகித்தனர். நகர செயலர் குமரன் வரவேற்றார்.

 இதில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது: கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருண்மொழித்தேவன் எம்பியாவது உறுதி. இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர்கள் மீதான தாக்குதல்,  கச்சத்தீவு, முல்லை பெரியாறு, காவிரி நதிநீர் என்று எந்த பிரச்னைகளை எடுத்துக்கொண்டாலும் புதுதில்லிக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Advertisement

 நாம் இங்கிருந்து கடிதம் தான் எழுதுகிறோம். ஆனால் தட்டிக்கேட்கும் அதிகாரம் புதுதில்லிக்குத்தான் உள்ளது. அதனால்தான் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் அல்லது அதிகாரம் உள்ள இடத்துக்கு நாம் போக வேண்டும்.

 குறைந்த எண்ணிக்கையில் எம்பிக்களை கொண்ட கர்நாடகத்தை சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆகி இருக்கிறார். எனவே எண்ணிக்கை பெரிது அல்ல, பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.யை தேர்வு செய்கிறோம். ஆனால் ராஜதந்திரம் தெரிந்தவர்தான் பிரதமர் ஆகிறார். அது முதல்வர் ஜெயலலிதாதான்.

 திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ், பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வது தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவர் அமைத்த ராஜதந்திரம். இனி அவர் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆட்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதாவை தில்லி செங்கோட்டைக்கு அனுப்ப அனைவரும் சூளுரை ஏற்போம் என்றார்.

 கடலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான சொரத்தூர் ராஜேந்திரன்,  அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல்அமீது ஆகியோர் பேசினர்.

 வேட்பாளர் அருண்மொழிதேவன், கடலூர் நகர்மன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத்தலைவர் குமார், ஒன்றிய செயலர்கள் இராம.பழனிச்சாமி, பிவிஜெ.முத்துக்குமாரசாமி,மாவட்ட மாணவரணி செயலர் மகேஷ், விவசாய பிரிவு செயலர் காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.