சிதம்பரம் அருகே கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ கட்சி கோரிக்கை
சிதம்பரம் அருகே தாக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்சிஸ்ட், லெனினிஸ்ட் இந்திய கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே தாக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்சிஸ்ட், லெனினிஸ்ட் இந்திய கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் கடந்த ஏப்.24-ம் தேதி தேர்தல் முன்விரோதத்தில் தலித் குடியிருப்பிற்குள் 25 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடைபெற்றது. இதில் 6 பேர் காயமுற்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்) குழு ஒன்று மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் வடக்குமாங்குடி கிராமத்திற்கு செல்ல முயன்றது. காவல்துறை அனுமதி மறுத்ததால் அக்குழுவினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தது.
சிதம்பரத்தில் அக்குழுவின் தலைவரும், கட்சி மாநில செயலாளருமான பாலசுந்தரம் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: தேர்தல் நடந்த ஏப்.24-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று தலித் பெண்கள், முதியவர்கள், சிறியவர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களில் பாப்பா (65) என்ற மூதாட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்த தலித்துகளை பழிதீர்த்துக் கொள்ளும் தாகுத்தலாக நடைபெற்றுள்ளன. கடந்த 3 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இத்தொகுதியில் போட்டியிட்டு வருவதை ஒட்டி, தொகுதியில் உள்ள தலித்துகள் அரசியல் வேட்கையுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அணி திரண்டு வருகின்றனர். தலித்துகளின் அரசியல் அணி திரட்டலை முறியடிக்கும் நோக்கி பாமக, வன்னியர் சமூகத்தினரையும் உசுப்பி விடுவதும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது.
தருமபுரியில் அன்புமணியை வெற்றி பெறச்செய்வதும், சிதம்பரத்தில் திருமாவளவனை தோற்கடிக்கச் செய்வதுமே இந்த தேர்தலில் பாமகவின் அறிவிக்கப்படாத திட்டமாகும். காட்டுமன்னார்கோயில் அருகே ஈச்சம்பூண்டி, வேலப்பூண்டியிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தலித்துகள் மீதான தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலும், பதற்றத்திலும் பெரும்பாலான தலித் கிராமங்கள் உள்ளன. இந்த வன்கொடுமை தாக்குதள் குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர்களோ கண்டிக்கவில்லை. தாக்குதலுக்கு ஆளான வடக்குமாங்குடி கிராம தலித்மக்கள் வேறு இடத்தில் குடியமர்த்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது தலித்துகளின் பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துகிறது. எனவே பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடத்திலே தலித்துகள் அச்சமின்றி வாழ உறுதி செய்ய வேண்டியது மாநில அரசும், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதன் மூலமே தலித்துகள் அந்த நம்பிக்கை ஏற்படுத்திட முடியும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சி தொடர் இயக்கம் நடத்திட திட்டமிட்டுள்ளது என பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.