செய்யாறு அருகே 2 சாலை விபத்துகளில் மூவர் சாவு
செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் இறந்தனர்.
செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் இறந்தனர்.
செங்கம் அடுத்த வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமார் (25). செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபாவதி (22). இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (மே 2) மாமியார் வீட்டுக்கு வந்த குமார் தனது மனைவி ரூபாவதி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த மைத்துனர் கவியரசு (15) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் காஞ்சிபுரம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சேலேரி பகுதியில் சென்றபோது காஞ்சிபுரத்தில் இருந்து ஆற்காடு நோக்கிச் சென்ற கார் பைக் மீது மோதியது. மூவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைநதனர். இவர்களில் கவியரசு அதே இடத்தில் இறந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தம்பதியை பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குமார் இறந்தார். இதுகுறித்து, பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து:
வந்தவாசி, கே.எஸ்.கே.நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சையத் பஷீர் (42). இவர், வெள்ளிக்கிழமை (மே 2) மாலை செய்யாறில் இருந்து பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். புரிசை ஏரிக்கரை அருகே சென்றபோது வந்தவாசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த சையத் பஷீர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து, அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.