பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில். இக்கோயிலில் திங்கள்கிழமை சித்திரைத் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு பலிபீட பூஜை, கங்கணம் கட்டுதல், தேர்க்கு தீர்த்தம் தெளித்தல் போன்றவை நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலையில் விக்னஷ்வனேவர் அனுமதி பெறப்பட்டு சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
கொடிப்படம் கோயிலை வலம் வர செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் கொடிப்பாடல்கள் பாடப்பட்டு செப்புக்கொடி மரத்தில் காலை ஆறு மணிக்கு மேல் திருக்கொடியேற்றம் நடத்தப்பட்டது. கம்பத்துக்கு மாவிலை, தர்ப்பைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடப்பட்டது. பூஜைகளை திருவள்ளரை கோயில் வாசுதேவபட்டர் தலைமையில் வரதராஜ அய்யங்கார், வெங்கட்ராம அய்யங்கார், சீனிவாசன் அய்யங்கார், கார்த்திக் அய்யங்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கொடியேற்றம் முடிந்த பின் சுவாமி சப்பரத்தில் நான்கு ரதவீதி உலா எழுந்தருளினார்.
10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிம்மவாகனம், அனுமார்வாகனம், தங்கக்குதிரை, சேஷவாகனங்களில் நான்குரத வீதிகளில் உலா வரவுள்ளார். வரும் மே மாதம் 11ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 13ம் தேதி காலை திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
விழா நாட்களில் கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, காண்ட்ராக்டர் நேரு, பேஷ்கார் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.