காவல்துறையினரைக் கண்டித்து பழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
பழனி வழக்குரைஞர் சங்கத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடிவாரம் காவல்நிலையத்துக்கு அவரது தரப்பினர் தொடர்பாக ஒரு விளக்கம் கேட்கச் சென்றுள்ளார்.
பழனியில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
பழனி வழக்குரைஞர் சங்கத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடிவாரம் காவல்நிலையத்துக்கு அவரது தரப்பினர் தொடர்பாக ஒரு விளக்கம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் வினோதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கார்த்திக் கண்ணனை தரக்குறைவாக நடத்தியுள்ளனர். மேலும், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அலுவலகம் திரும்பிய கார்த்திக் கண்ணன் வழக்குரைஞர் சங்கத்தில் முறையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸாருக்கும், வழக்குரைஞர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பழனியில் வழக்குரைஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதித்துறை தொடர்பான பணிகள் பாதிப்புக்குளாகின. மேலும் வழக்கு தொடர்பாக கோர்ட் வளாகத்துக்கு வந்திருந்த காவல்துறையினரை வழக்குரைஞர்கள் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குற்றவாளிகள் மீதான விசாரணைகளும் பாதிப்புக்குள்ளானது.
வழக்குரைஞர்களை அவமதித்த காவல்துறையினர் மீது தகுந்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் தீவிரமாகும் என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்,.