நெல்லையில் மறியல் செய்ய முயற்சி
திருநெல்வேலியில் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து பொதுநல அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால்
திருநெல்வேலியில் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து பொதுநல அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரம் பேட்டை பிரதான சாலையில் மண்டபம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் வரை கழிவு நீர் ஓடை சீரமைக்கப்பட்டது. இப்பணிக்காக அங்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் கலவை, மண், கற்கள் சாலையில் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
இதேபோல் பேட்டை 49 ஆவது வார்டு அந்தோணியார் தொடக்கப் பள்ளி அருகில் தார் சாலையில் பெரிய அளவில் தோண்டப்பட்டது. எனினும் அங்கு சாலை சீரமைக்கப்படாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட பொதுநல பொதுஜன அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே அமைப்பின் தலைவர் முகம்மதுஅயூப் தலைமையில் நி்ர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நகரம் காட்சி மண்டபம் அருகில் மறியலில் ஈடுபட திரண்டனர். காவல் ஆய்வாளர் இசக்கி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.